சோமாலியாவில் கடும் பசியால் வாடும் 6.5 மில்லியன் மக்கள்: ஐக்கிய நாடுகள் சபை கவலை
சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சி, தொடர் உள்நாட்டுப் போர் மற்றும் சர்வதேச நிதியுதவி குறைப்பு ஆகியவற்றால் சுமார் 6.5 மில்லியன் மக்கள் (நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு) கடும் பசியால் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டச்சத்துக் குறைபாடு
குறிப்பாக, 1.8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 5 இலட்சம் குழந்தைகள் உயிருக்கே ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் 'ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாட்டின்' (IPC) புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தொடர்ந்து பொய்த்து வரும் மழைக்காலங்கள் காரணமாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முற்றிலும் அழிந்துள்ளதால், கிராமப்புற மக்கள் உணவிற்காகத் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தீர்வு கிடைக்க வாய்ப்பு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பெய்யும் மழையினால் மட்டுமே ஓரளவிற்குத் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், போதிய நிதி உதவி கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) தனது பணிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இது ஒரு மிகப்பெரிய மனிதாபிமானப் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |