முள்ளியவளையில் புதையல் தேடிய தென் பகுதியை சேர்ந்தவர்கள்
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் புதையல் ஒன்றை அகழ்ந்து எடுக்க முயற்சித்த 10 பேரை கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவல்
முள்ளியவளையில் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்குரிய இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன் அதனை அவர்கள் முள்ளியவளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்று நடத்திய விசாரணைகளில் அங்கு இருந்த நபர்கள் தென்பகுதியில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் மண்ணுக்குள் இருக்கும் பொருட்களை தேடுவதற்கான அதிசக்தி வாய்ந்த ஸ்கேனர் மற்றும் பூஜை பொருட்களையும் தம்வசம் வைத்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அனைவரும் தென் பகுதியை சேர்ந்தவர்கள்
இதனால், சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார், அவர்கள் சென்றிருந்த இரண்டு வான்களையும் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் ஜா-எல, அம்பலந்தோட்ட, பதவி ஸ்ரீபுர, அவிசாவளை, மொறட்டுவை மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் ஆர்.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.