விளக்கமறியலில் இருந்து வெளியேறிய பெக்கோ சமனின் மனைவி!
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் மனைவியான ஷானிகா லக்ஷானி பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் கைது செய்யப்பட்டது.
பிணை நிபந்தனை
இவ்வாறு கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த பெக்கோ சமனின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணை மற்றும் 150,000 ரூபா பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம ஒக்டோபர் 31 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து பெக்கோ சமனின் மனைவி நேற்று வெள்ளிக்கிழமை (26) தனது பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.