நாட்டை ஆட்சி செய்வது கோட்டாபய-ரணில் அல்ல! கறுப்பு நிற குருவி! நாடாளுமன்றில் வெளிப்படுத்திய ரோஹினி!
நாட்டில் இன்று கோட்டாபய ராஜபக்ச அல்லது ரணில் விக்கிரமசிங்க ஆட்சி செய்யவில்லை
எனினும் கறுப்பு நிற குருவியே இன்று நாட்டை ஆட்சி செய்வதாக ஐக்கி்ய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாடாளுமன்றின் பிரதிசபாநாயகர் பதவி வழங்கப்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விரும்பியபோதும், அவருக்கு ஆதரவு வழங்குவதாக கூறிய பொதுஜன பெரமுனவினர் அந்த யோசனையை நிராகரித்துள்ளனர்.
இது பிரதமருக்கு ஏற்பட்ட முதலாவது தோல்வியாகும் என்று ரோஹினி கவிரட்ன குறிப்பிட்டார்.
நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, நாடு எதிர்கொள்ளும் ஆபத்தை உணர்த்தினார்.
எனினும் அது பிரதி சபாநாயகர் நிலை தொடர்பில் அவரின் விருப்பத்தை நிறைவேற்றமுடியாமல் போனமை குறித்து கவலை ஏற்பட்டுள்ளது என்றும் ரோஹினி தெரிவித்தார்.
இந்தநிலையில் நாட்டில், இளைஞர்களின் போராட்டம் நிறைவடையும் போது இந்த நாட்டின் சனத்தொகையில் 52 வீதம் மற்றும் வாக்காளர்களில் 56 வீதமான பெண்களுக்கு நாடாளுமன்றில் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் நிலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படவேண்டும் என்று ரோஹினி கோரிக்கை விடுத்தார்.
ரோஹினி கவிரட்னவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெண் ஒருவர் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்படாமை தொடர்பில் தம்மீது குற்றம் சுமத்தவேண்டாம் என்று குறிப்பிட்டார்.
தாம் ஆளும் கட்சியிலும் இல்லாமல் எதிர்கட்சியிலும் இல்லாமல், பாலம் ஒன்றின் ஆரம்பப் பகுதியில் இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் செனட் சபையின் தமது தாயாரின் மாமியாரான எட்லின் மொனமொரே பிரதி சபாநாயகராக பதவி வகித்தார் அதற்கு பின்னர் பெண் ஒருவர் சபாநாயகராகவோ அல்லது பிரதி சபாநாயகரகவோ தெரிவுசெய்யப்படவில்லை என்று ரணில் சுட்டிக்காட்டினார்.
சர்வ கட்சி அரசாங்கத்தின் கீழ் ஆரம்பமான முதல் நாடாமன்ற அமர்வில், விட்டுக்கொடுப்புக்கு தயாரில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இருந்து பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார்.
முன்னதாக நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமானபோது, கடந்த நாடாளுமன்ற அமர்வில், பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அந்த நிலையில் இருந்து விலகியைதை அடுத்து, பிரதி சபாநாயகருக்கான தெரிவை சபாநாயகர் கோரினார்.
இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி கவிரட்னவை பிரதி சபாநாயகராக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்
இதனையடுத்து ஆளும் கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டது.
இந்தநிலையில் வாக்கெடுப்பை நடத்துமாறு கோரப்பட்டது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஆளும் கட்சியில் இருந்து விலகிய விமல் வீரவன்ச உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
நாடு இருக்கும் நிலையில் பிரதமரும் எதிர்கட்சி தலைவரும் இணைந்து இதில் தீர்மானம் ஒன்றை எட்டவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை மீறி வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், தமது உறுப்பினர்கள் வாக்குகளை நிராகரிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தனர்.
இதனையடுத்து முன்மொழியப்பட்டவர்களில் இருவரில் ஒருவர் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள சபாநாயகர் அவகாசத்தை வழங்கினார்.
எனினும் இதற்கு இரண்டு தரப்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதன் காரணமாக வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்படி வாக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பின்படி அஜித் ராஜபக்சவுபுக்கு 109 வாக்குகளும், ரோஹினி கவிரட்னவுக்கு 78 வாக்குகளும் கிடைத்தன. 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இதனையடுத்து பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பமானது.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளையின் மரணம் குறித்து நாடாளுமன்றம் தமது கவலையை வெளியிடுவதாக சபாநாயகர் அறிவித்தவேளையில், ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், அந்த அறிக்கை தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.
அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை என்று சபாநாயகர் அறிவிக்கவேண்டும் என்று அவர்கள் கோசமெழுப்பினர்.
இதனையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையின்படி, சபாநாயகர், அமரகீர்த்தி அத்துகோரளையின் கொலை என்ற சொல்லை இணைத்து தமது கவலையை வெளியிட்டார்