ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஒன்றரை வருடமாக, கோட்டாபய ராஜபக்சவுக்கு உதவி வருகிறார்- கசிந்த தகவல்
தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் தவறான தீர்மானங்கள் காரணமாகவே இன்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்களே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு உறுதியளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே இந்த தாக்குல்களுக்கு காரணங்களாக அமைந்திருந்தன.
இந்தநிலையில் இன்று அரசாங்க கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்பட பசில் ராஜபக்சவே காரணமாக இருந்து வருகிறார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே, மகிந்த ராஜபக்ச, அரசியலில் இருந்து விலகியிருந்தால், பாரிய நன்மதிப்புடன் விலகியிருக்கமுடியும்.
எனினும் பசில் ராஜபக்ச அந்த இடத்துக்கு வந்துவிடுவார் என்ற காரணத்தினாலேயே அவர் அன்று விலகவில்லை.
இதனையடுத்து தமது சகோதரர்களை துரத்திவிட்டு ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பசில் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில் இறுதிவரை நாட்டை அழித்துவிட்டே அவர் இலங்கையில் இருந்து செல்வார். இன்றும் அவர் ரணில் விக்கிரமசிங்கவை அரசியலில் இருந்து துரத்துவதற்கு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாகவே, கடந்த பிரதி சபாநாயகர் தெரிவின்போது பெண் ஒருவரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், பசில் ராஜபக்ச தமது பலத்தை காட்டி தமது கட்சியின் ஆண் ஒருவருக்கு இடமளித்தார் என்றும் சமிந்த விஜயசிறி தெரிவித்தார்.
இன்று ஆளும் கட்சியின் பலரது வீடுகள் தீக்கிரையானபோதும் பசிலுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று சமிந்த விஜயசிறி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்கட்சியில் இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஒன்றரை வருடங்களாக, கோட்டாபய அரசாங்கத்துக்கு உதவி வந்தார்.
எனினும் அரசாங்கத்தை அவரால், உரிய வழிக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்று சமிந்த விஜயசிறி தெரிவித்தார்.