லிட்ரோ நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்றுக்கு அழைத்து விசாரணை! - ரணில் விக்ரமசிங்க பணிப்புரை
லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்றுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
எரிவாயு கப்பல் துறைமுகத்துக்கு வந்துள்ளநிலையில் நேற்று இரவு வரையில் பாரவூர்திகள் மூலம் அவை விநியோகிக்கப்படவில்லை.
எனவே அதிகாரிகளின் தாமதம் குறித்து விசாரணை செய்யவேண்டியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
எனவே கோப் குழுவின் தலைவர் இது தொடர்பில் எரிவாயு நிறுவன அதிகாரிகளை அழைத்து கருத்துக்களை அறியவேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை முழுமையாக நிவர்த்தி செய்ய இன்னும் ஒன்றரை மாதம் செலவிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் எழுப்பிய கேள்வியின்போதே ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.
இதேவேளை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கவேண்டியுள்ளது.
இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என்று லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் ஓமானில் இருந்து இன்று மற்றுமொரு எரிவாயு கப்பல் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.