தொழிலாளர்களுக்கான உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருகின்றது - சாள்ஸ் நிர்மலநாதன்
தொழிலாளர்களுக்கான உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருகின்றது. அதே நேரம் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடர்கின்றது.
எமக்கான உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருவதுடன் எமது உரிமைக்காக ஏதோ ஒரு வடிவில் நாம் தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கின்றோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.இது தொடர்பான மே தின அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன்று உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் கோவிட் -19 தாக்கத்தின் காரணமாக பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் 2021 மே தினம் எம்மை கடந்து செல்கின்றது.
தமிழர் தேசத்தை பொறுத்தவரை விவசாயம் மற்றும் கடற்றொழில் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்றொழிலை பொறுத்தவரை இந்திய றோலர் வருகையினால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் நாளாந்தம் பாதிக்கப்படுக்கொண்டு வருகின்றது.
அரசாங்கத்தின் தவறான கொள்கையால் பல உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.மக்களின் வாழ்கைச்செலவு அதிகரித்து செல்கின்றது. யுத்த காலத்தில் இருந்ததை விட இறுக்கமான சூழ்நிலையில் இங்குள்ள மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக பல ஆண்டுகளாக பலர் இன்றும் சிறைகளில் வாழ்ந்து வருவதுடன் ,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வீதிகளில் தொடர்ந்த வண்ணமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.