நிதியமைச்சர் பதவியை மகிந்த, பசிலுக்கு வழங்கியமைக்கு காரணம் இதுவா? சபையில் கேள்வி
எரிபொருள் விலையை உயர்த்தியது அப்போதிருந்த நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவா என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த கோவிட் காலத்தில் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் வேலையில் எரிபொருள் விலையை உயர்த்தி மக்களின் வாழ்க்கைக்கு பாரிய நெருக்கடியை கொடுத்ததன் காரணமாகவே உதய கம்மன்பிலவுக்கு இன்று நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.
அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்க வேண்டுமென்றே சூழ்ச்சி செயது எரிபொருள் விலையை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளார்கள் என்று சாகர காரியவசம் அன்று கூறினார். அதற்கு உதய கம்மன்பில எரிபொருள் விலையை நான் உயர்த்தவில்லை,
நிதியமைச்சரின் அனுமதியுடனேயே விலை உயர்த்தப்பட்டது என்று கூறினார். ஆகவே நான் கேட்கின்றேன், சாகர காரியவசம் கூறியதை போன்று அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி சூழ்ச்சி செய்து எரிபொருள் விலையை உயர்த்தியது அப்போதிருந்த நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவா என நான் கேட்க விரும்புகின்றேன்.
அதன் காரணமாகவா தான் வகித்த நிதியமைச்சர் பதவியை பசில் ராஜபக்ஷவை அழைத்து அவருக்கு வழங்கினார் எனவும் நான் கேட்க விரும்புகின்றேன்.
எரிபொருள் விலையை உயர்த்தி மக்களுடைய வாழ்வாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாகியமைக்கு உதய கம்மன்பில மாத்திரம் அல்ல இந்த முழு அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.