குறுகிய நேரத்துக்குள் நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற அமர்வு
இலங்கையில் இன்று கூடிய நாடாளுமன்றம் குறுகிய நேரத்துக்குள் அமர்வை நிறுத்திக்கொண்டது.
இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமான அமர்வு சுமார் அரை மணித்தியாலமே இடம்பெற்றது.
இதன்போது மறைந்த பிரித்தானிய எலிசபெத் மகாராணிக்கு இலங்கையின் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரசன்னமாகாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இன்று நாடாளுமன்ற அமர்வு முற்பகல் 9.30க்கு ஆரம்பமான நிலையில், பிரதமர் தினேஸ் குணவர்த்தன இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
எனினும் நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பிரசன்னமாகியிருக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியம்

சுமார் 10 பேர் மாத்திரமே இன்று மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை கோரவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதன்போது பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, தாம் இது தொடர்பில் இன்று மத்திய வங்கியின் ஆளுநருடன் பேசியதாக குறிப்பிட்டார்.
இந்த இணக்கத்தை சமர்ப்பிப்பதில் எவ்வித தடைகளும் இல்லை என்று தம்மிடம் குறிப்பிட்ட மத்திய வங்கியின் ஆளுநர், இதற்கு முன்னர் கூறப்படாத வரிகள் தொடர்பான உணர்திறன் விடயங்கள் இணக்கத்தில் அடங்கியிருப்பதால், இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவேண்டியது நிதியமைச்சராகும் என்று தெரிவித்ததாக சபாநாயகர் கூறினார்.
இதனையடுத்து கருத்துரைத்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கத்தில் வரி உணர்திறன் விடயங்கள் இருக்குமாயின் அவற்றை தவிர்த்து, ஏனைய இணக்கங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்போது பதில் வழங்கிய சபாநாயகர், தாம் இது தொடர்பில் நிதியமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக உறுதியளித்தார்.
தேசிய சபை தொடர்பான யோசனை
இந்தநிலையில் அண்மையில் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளையின் இரங்கல் உரைக்காக இன்று அமர்வு கூட்டப்பட்டபோதிலும் தேசிய முக்கியத்துவம் கருதி, தேசிய சபையை அமைப்பதற்கான யோசனை தொடர்பிலான விவாதத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கவேண்டும் என்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன கேட்டுக்கொண்டார்.
எனினும் தேசிய சபை தொடர்பான யோசனை இன்னும் நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்துக்கு
வரவில்லை என்று சபாநாயகர் அறிவித்தமையை அடுத்து நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம்
திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.