திறைசேரியில் மாயமான பணம் தொடர்பான விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
திறைசேரியில் மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் நிதி அமைச்சால் தயாரிக்கப்பட்ட சிறப்பு விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சின் செயலாளர் டி.ஆர். ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பிற்குள் நுழைந்த இணையக்குற்றவாளிகள் மீதான விசாரணைகள் சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள்
பணத்தை மீட்பதற்கு சாத்தியமான அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் செயல்முறை குறித்து தொழில்நுட்ப மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்களின் உதவியும் இப்பணிக்காக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திருட்டு குறித்து சட்ட அமலாக்க முகாமைகளுக்கும் பிற தொடர்புடைய துறைகளுக்கும் தகவல் தெரிவிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
திறைசேரியின் இரண்டு பிரதி செயலாளர்கள் அடங்கிய அதிகாரி குழு ஒன்று நியமிக்கப்பட்டு இச்சம்பவம் குறித்து உள்விசாரணை நடத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டவர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.