சரணடைந்த 3000 பேர் காணாமல் போயுள்ளதாக உங்கள் ஆணைக்குழுவே கூறியுள்ளது - சுமந்திரன்
எமது சுயாதீனத்தை பாதுகாப்போம், சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என கூறிக் கொண்டு யாரை முட்டாளாக்க இந்த திருத்தங்களை கொண்டு வருகின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான நடத்தல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் திருத்த சட்டமூலம் 1994ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.
இவற்றில் ஏழு பேருக்கே இப்போது வரையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இதன் மூலமாக கிடைத்த பலன் பூச்சியமாகவே அமைந்துள்ளது. எனவே இந்த சட்டம் இருப்பதில் அர்த்தமே இல்லை.
காணமால் ஆகப்பட்டோருக்கான ஆணைக்குழு பற்றி பேசினீர்கள், தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பது மக்கள் கூற முன்னர், உங்களின் அரசாங்கம் உருவாக்கிய ஆணைக்குழுவே இதனை கூறியது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணமால் போயுள்ளனர் என்பதை நீங்கள் அமைத்த ஆணைக்குழுவே கூறியது.
20 ஆயிரம் பேர் காணமால் போனார்கள் என பரணகம ஆணைக்குழு கூறியது, உடலாகம ஆணைக்குழு, எல்.எல்.ஆர்.சி ஆணைக்குழு என்பனவும் கூறியுள்ளன.
மஹிந்த ராஜபக்ச நியமித்த ஆணைக்குழுவே இதனைக் கூறியுள்ள நிலையில் இது குறித்து நீங்கள் கூற வருவது என்ன.
பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்த மூவாயிரம் பேர் காணமால் போயுள்ளனர் என உங்களின் ஆணைக்குழுவே கூறியுள்ளது.
உங்களின் ஆணைக்குழுவே இதனை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவர்களின் ஒருவரைக்கூட கண்டறிய முடியாது போயுள்ளது என்றால் நீங்கள் பேசுவதில் அர்த்தம் உள்ளதா? கொழும்பில் 11 இளைஞர்களை கடற்படையினர் கடத்தி கப்பம்பெற்ற சம்பவத்தில் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தனர்.
அவர்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது, இறுதியாக அந்த வழக்குகளுக்கு என்ன நடந்தது. நீங்கள் தலையிட்டு வழக்குகளை மாற்றிவிட்டு இங்கு வந்து நியாயம் பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது.
எனவே இந்த சட்ட திருத்தங்கள் அனைத்துமே ஐரோப்பாவை ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே. இப்போதே காலம் கடந்துவிட்டது.
உண்மையாக அரசாங்கம் நல்ல நோக்கத்தில் இவற்றை செய்யவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல முழு உலகமும் இதனை தெரிந்துகொள்ள வேண்டும்.
மனித உரிமை சட்டங்களை பின்பற்றும் உங்களின் செயற்பாடு உண்மையான ஒன்றல்ல. எனவே இந்த பொய்யான செயற்பாடுகள் வெற்றிபெறாது என குறிப்பிட்டுள்ளார்.