இன்னும் 10 பேர் இணைந்தால் நாடாளுமன்றத்தை கலைத்து விடலாம்! மரிக்கார் தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கோ அமைச்சு பதவிகளை ஏலம் விட்டு அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கோ எவ்வித மக்கள் ஆணையும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவை தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு உள்ளூராட்சி சபைகளில் கூட மக்கள் ஆணை இல்லை
அரசாங்கத்திற்கு குறைந்தது நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளில் கூட மக்கள் ஆணை இல்லை. இதனால், மக்களின் உண்மையான நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும் அரசாங்கமும், நாடாளுமன்றமும் உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக துரிதமாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் எதிர்க்கட்சிக்கு கிடைக்க வேண்டும்.
இன்னும் 10 பேர் இணைந்தால் விருப்பமி்ன்றியேனும் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்
இதனடிப்படையில் இன்னும் 10 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டால், விருப்பமின்றியேனும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்.
தற்போது நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீதமுள்ளவர்கள்,பொதுஜன பெரமுனவில் இருந்து எதிர்க்கட்சிக்கு வந்தவர்கள் என எதிரணியில் 103 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் எதிர்க்கட்சியில் இணைந்தால் நாடாளுமன்ற தானகவே கலைக்கப்படும் எனவும் எஸ்.எம்.மரிக்கார் கூறியுள்ளார்.