யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவ பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
தமது வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி சித்தமருத்துவ பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
சித்த மருத்துவ பட்டதாரியாகி நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும், இன்னும் பட்டதாரிகள் நியமனங்களுக்குள் தாம் உள்வாங்கப்படவில்லை எனவும், இதனால் ஜனாதிபதியும், பிரதமரும் இதில் தலையிட்டு தமது கோரிக்கைக்குத் தீர்வு காணவேண்டும் எனவும் பேரணியில் கலந்துகொண்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
வேலையற்ற சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, சித்த மருத்துவ பீடத்திலிருந்து சித்த மருத்துவ வைத்தியசாலை வரையில் முன்னெடுக்கப்பட்டது.
தமது போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ மாணவர் ஒன்றியம் ஆதரவளித்த போதிலும், அந்தப் பேரணியில் மாணவர்களைக் கலந்துகொள்ளவிடாது தடுக்கப்பட்டிருந்தது எனப் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்.



