நான்கு மாதங்களில் யானை தாக்கி 34 பேர் உயிரிழப்பு (Photos)
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் காட்டு யானைகள் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர் என்று விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 47 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 மாகாணங்கள் மற்றும் 19 மாவட்டங்களில் உள்ள 131 பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை மற்றும் மனித மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் உயிரிழந்த 47 காட்டு யானைகளில், 13 யானைகள் துப்பாக்கிச்சூடு காரணமாகவும், மேலும் 17 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டில் 407 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் 122 பேர் உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், யானை - மனித மோதலால் 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கடந்த வருடத்தில் யானை - மனித மோதலால் 142 பேர் உயிரிழந்ததுள்ளனர் எனவும் விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் மிகிந்தலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் பலியாகியுள்ளன. புதுக்குளம் பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றின் உரிமையாளரால் சட்டவிரோத மின்சார வேலி ஒன்று அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மோதி குறித்த யானைகள் உயிரிழந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, பனங்காமம், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், தாங்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றிரவும் தாம் வாழும் பகுதிகளில் காட்டுயானைகள் புகுந்து அதிகளவிலான பயிர்களை அழித்து நாசம் செய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பனங்காமம், மூன்றுமுறிப்பு ஆகிய கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்கள் தமது வாழ்வாதார தொழிலான விவசாயத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்மைய நாட்களாக இந்த பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.
அதாவது இரவு வேளைகளில் பயிர்செய்கை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து வரும் அதேவேளை குடியிருப்பு காணிகளிலும் உள்ள தென்னை,வாழை மற்றும் பலா போன்ற மரங்களையும் அழித்து வருகின்றன.
மக்கள் கோரிக்கை
தற்போது யானைகள் வீடுகளுக்குள் நுழையும் அளவிற்கு பாதிப்புக்கள் அதிகரித்துள்ளது என்றும் இதனைக்கட்டுப்படுத்த தமது கிராமங்களைச் சுற்றி யானை வேலிகளை அமைத்துத் தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்: யது