டிஎன்ஏ பரிசோதனைக்காக பல்லேகம ஹேமரத்தன தேரரின் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது..!
15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட அநுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் டி.என்.ஏ. பரிசோதனைக்காக கொழும்பு அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நிட்டம்புவ பொலிஸாரின் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்று (16) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
டிஎன்ஏ பரிசோதனை
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, நிட்டம்புவ பொலிஸ் பிரிவிலுள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த சிறுமியும், அவரது காதலர் எனக் கூறப்படும் நபரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.பின்னர், அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கம்பஹா பொது வைத்தியசாலையின் நீதிமருத்துவ நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், குறித்த சிறுமி இதற்கு முன்பும் பல தடவைகள் பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணை
இதனைத் தொடர்ந்து, கம்பஹா பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், சிறுமியிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
அப்போது, தன்னை முதன்முதலில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அநுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு விகாரையின் விகாராதிபதி என சிறுமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தனது காதலர் மற்றும் உறவினரான மச்சானும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam