வடக்கில் இலக்கைத் தாண்டிய சிறுபோக நெற்செய்கை - ஆளுநர் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்றாம் போகச்செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
சிறுபோகத்தில் இலக்கிடப்பட்ட பரப்பளவை விட அதிகளவான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், கிடைக்கப்பெற்றுள்ள நீர்வளத்தை அறிவியல் அடிப்படையில் முகாமைத்துவம் செய்து மூன்றாம் போகச் செய்கைக்குத் தேவையான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது வடக்கு மாகாண விவசாயத் துறையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உதயநிதி ஸ்டாலின் கைதினால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு - களமிறங்கிய அதிரடிப்படையினர் - முதல்வர் பிறப்பித்த உத்தரவு
நவீன பயிரிடல் முறைகள்
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்களின் 2026ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், நிதி மற்றும் பௌதிக முன்னேற்றங்கள் என்பன விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.
2026ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வடக்கு மாகாணத்தில் 37,961 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 38,405 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இலக்கு விஞ்சப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 156,326 மெட்ரிக் தொன் நெல் உற்பத்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
நெல் உற்பத்தித் திறனை மேலும் உயர்த்தும் நோக்கில் நாற்று மாற்று நெற்செய்கை முறை, பராசூட் நாற்று நடவு முறை உள்ளிட்ட நவீன பயிரிடல் முறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், நெற்செய்கைத் திட்டங்களும் பல மாவட்டங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
நீர்விநியோக முகாமைத்துவம்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது, நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீர் இருப்பு, நீர்விநியோக முகாமைத்துவம் மற்றும் விவசாயிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த கலந்தாலோசனைகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மூன்றாம் போகச் செய்கை வன்னேரிக்குளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள சில செயற்றிட்டங்கள் தற்போது முழுமையான இயங்குநிலையை எட்டாதிருப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
அவற்றை விரைவாக மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான பரிந்துரைகளை மத்திய விவசாய அமைச்சுக்கு சமர்ப்பித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.
மேலும், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து அம்மாச்சி உணவகங்களிலும் ஒரே தரமான நடைமுறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
குறிப்பாக, பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பயன்பாட்டை முற்றாகக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பயன்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களங்களின் 2026ஆம் ஆண்டுக்கான பெரும்பாலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, திட்டமிடல், பொறியியல் மற்றும் நிர்வாகம்), நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், விவசாயத் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளர், காணித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட மட்ட பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.



