மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு நோய் தாக்கம் (PHOTOS)
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமெனவும், டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வர வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் கு.சுகுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் மிகவும் குறைந்தளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படும் மாதமாகும். ஆனால் என்றுமில்லாத வகையில் இந்த மாதம் டெங்கு நோய் தாக்கம் மிக வேகமாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
மட்டக்களப்பு மாட்டத்தில் ஜனவரி தொடக்கம் இன்று வரையில் 700 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் அரைவாசிப்பேர் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஒரு மாத காலத்திற்குள் நூறுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன், அதில் அரைவாசிப்பேர் மட்டக்களப்பு நகரப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் 35வயது மற்றும் 47வயதுடைய இரண்டு பேர் கறுவப்பங்கேணி பகுதியில் டெங்கு தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இதுவொரு பாரதூர நிலைமையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் இவற்றினை கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய காலத்திலிருக்கின்றோம். இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் பரீட்சை நிலையங்களை கள விஜயம் ஒன்றினூடாக பார்வையிட்டதுடன், டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்களாக இதன்போது இனங்கண்ட பாடசாலை நிர்வாகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த கள விஜயத்தின் போது டெங்கு பரவ வாய்ப்புள்ள இடங்கள் என இனங்கானப்பட்ட பகுதிகள் துப்பரவு செய்யப்படாவிட்டால் எந்தவொரு உயர்வு, தாழ்வும் பாராது உச்சக்கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.