எங்கள் போராட்டங்கள் முடக்கப்பட்டால் சர்வதேசத்திடம் எங்களுக்காக குரல் கொடுங்கள்! - ம.ஈஸ்வரி!
புலம்பெயர்ந்த உறவுகளே இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கும் வாக்குறுதி ஒன்றினை தருகின்றோம். சில சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் முடக்கப்பட்டு இங்கு செய்யமுடியாத சூழ்நிலை வந்தால் சர்வதேசத்திடம் எங்களுக்காகக் குரல் கொடுத்து எங்களுக்கான நீதியினை பெற்றுத்தருமாறு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று சர்வதேச சிறுவர்கள் நாளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.
இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று கொட்டும் மழையிலும் கொடிய நோய்க்கு மத்தியிலும் வாடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் ஆகிய நாங்கள் எங்களுக்கு நாளை என்ன நடக்கும் என்று தெரியா சூழ்நிலையில் சுற்றிவர பொலிஸார் ,மற்றும் புலனாய்வாளர்களின் பாதுகாப்பு என்ற போர்வையில் எங்களைப் படம் எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையிலும் நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். நாட்டின் ஜனாதிபதியின் வாக்குறுதி எங்களை மரணமாக்கிவிட்டது. நாங்கள் மரணித்த மாதிரி இருக்கின்றோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதலும் நட்ட ஈடும் கொடுப்பதாகச் சர்வதேசத்தினை நம்பவைத்து ஒரு பெரும் நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றது.
சர்வதேசமும் எங்களிடம் உள்ள பொறிமுறைக்கு போங்கள் உங்களுக்கான நீதி கிடைக்கும் என்றுசொல்கின்றது. என்ன நீதி கிடைக்கப்போகின்றது. கொலை செய்தவரிடம் இருந்து எந்த நீதியும் கிடைக்காத நிலையில்தான் நாங்கள் சர்வதேசத்தினை நாடி நிற்கின்றோம்.
எங்களுக்கான நீதியினை சர்வதேசம் பெற்றுத் தரவேண்டும். அத்துடன் புலம்பெயர்ந்த உறவுகள் எங்களுக்கான நீதியினை பெற்றுத்தர வேண்டும்.
30ற்கு மேற்பட்ட சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மரண சான்றிதளை வாங்கமுடியுமா? அவர்களுக்கும் என்ன நடந்தது என்று இதுவரைக்கும் கிடைக்காத பதிலைத்தான் கோரிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த நிலையில் இதனை நாங்கள் வெளிப்படுத்திக் கதைப்பதற்குக் கொடிய நோயினை சந்தர்ப்பமாகக் காட்டி எங்கள் போராட்டத்தினை முடக்கிவைத்திருக்கின்றார்கள்.
அவ்வாறும் நாங்கள் வந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்ற கட்டளைகள் வீடு தேடி வந்துகொண்டிருக்கின்றது. இதில் என்ன நியாயம் என்ன கிடைக்கப்போகின்றது ஜனாதிபதி வெளிநாடுகளில் வாக்குறுதி வழங்கிய அடுத்த நாள் எங்களுக்கு வீடுகளுக்குள் கட்டளைச் சட்டம் வருகின்றது நீங்கள் வீட்டிற்குள் வெளியில் செல்லமுடியாது என்று. இங்கு வாழ்கின்ற எங்கள் தமிழ் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உறவுகளுக்கு ஆதரவினை தந்து நீதிபெறும் வரை எங்களோடு சேர்ந்து போராடி இலங்கையில் எவரையும் நம்பமுடியாது.
இலங்கையில் எங்களுக்கான நீதி கிடைக்காது. புலம்பெயர்ந்த உறவுகளே இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கும் வாக்குறுதி ஒன்றினை தருகின்றோம். சில சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் முடக்கப்பட்டு இங்கு செய்யமுடியாத சூழ்நிலை வந்தால் சர்வதேசத்திடம் எங்களுக்காகக் குரல் கொடுத்து எங்களுக்கான நீதியினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


