எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது: அமைச்சர் ஜீவன் தொண்டமான்
கல்வியே எம்மை எப்போதும் காக்கும், எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது, எனவே, பிள்ளைகளை தயவுசெய்து பாடசாலைக்கு அனுப்புங்கள், பொருளாதார நெருக்கடி என்பதால் கல்வியை கைவிட்டால் எமக்கு விடிவு பிறக்காது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று (21.01.2024) நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மலையகத்தின் முன்னேற்றம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“ இன்றைய நாள் மிகவும் சந்தோசமான நாளாகும், தேசிய தைப்பொங்கல் விழாவை எமது மலையக மண்ணில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு இரவு, பகல் பாராது கடுமையாக உழைத்த எமது அமைப்பாளர்கள், இளைஞர் அணியினர் உட்பட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், எமது அழைப்பையேற்று மலையகத்துக்கு வருகை தந்து எமது மக்களை மகிழ்வித்த தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஸ், சம்யுக்தா, மீனாக்சி, ஐஸ்வர்யா டட்டா ஆகியோருக்கும் மக்கள் சார்பில் நன்றிகள்.
அதேபோல பெருமளவான இளைஞர்கள் வந்துள்ளனர், மக்களும் குவிந்துள்ளனர், அவர்களுக்கும் அன்புகலந்த நன்றிகளை கூறுகின்றேன்.
எதை செய்தாலும் விமர்சிக்கும் சிலர், வழமைபோல இந்த பொங்கல் விழாவையும் விமர்சிக்கின்றனர், பொங்கல்தான் முடிந்துவிட்டதே, எதற்கு தற்போது பொங்கல் எனவும் கேட்கின்றனர், தூங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் தூங்குபவர்போல் நடிப்பவர்களை எழுப்பமுடியாது.
காணி உரிமை
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், ஆம், காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
அதற்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் வீட்டு திட்டத்தை சிலர் அரசியல் ரீதியாக விமர்சிக்கின்றனர், என்னை பொறுத்தவரை 10 ஆயிரம் வீடுகளைவிட ஒரு லட்சத்து 76 ஆயிரம் குடும்பங்களுக்கான காணி உரிமையே பிரதான இலக்கு, அதனை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியும் நிச்சயம் நிறைவேற்றப்படும். சம்பளப் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு கிட்டும். அதேவேளை, இங்குவருகைதந்துள்ள பெற்றோர்களிடமும் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றேன்.
கடும் கஷ்டம் வந்தாலும் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தவிட வேண்டாம், அவர்களை படிக்க வையுங்கள், தீர்வை தேடுகின்றோம், அந்த தீர்வு கல்வியில் தங்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அது புரியாவிட்டால் விடிவு இல்லை” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, அமைச்சுகளின் செயலாளர்கள், நுவரெலியா மாவட்ட அரச அதிபர், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |