ஊடகவியலாளர்களுக்கு எமது கட்சி பக்கபலமாக இருக்கும்: பிரசாந்தன் சூளுரை
ஜனநாயகத்தின் குரல்வளைகளை யாரும் நசுக்குவதை இடம் கொடுக்க முடியாது, மக்களுக்காக பல ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (14.06.2023) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ''எமது கட்சி ஆனது கருத்தை கருத்தால் வெல்ல வேண்டும் என்பதற்காக ஆயுதத்தை கழைந்து நாம் ஜனநாயக வழிக்கு திரும்பியவர்கள். நாமும் நமது கட்சி தலைவரின் நிலைப்பாடும் ஊடகம் என்பது மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கொண்டு செல்கின்றதாகும்.
நடுநிலையான மக்களின் கருத்து
மக்களின் கருத்துக்களை கொண்டு செல்கின்ற ஜனநாயகத்தின் குரல்வளையாக இருக்கின்றது. ஜனநாயகத்தின் குரல் வளைகளை யாரும் நசுக்குவதை இடம் கொடுக்க முடியாது.
பக்க சார்பின்றி நடுநிலையாக மக்களின் கருத்துக்களை கொண்டு செல்கின்ற ஊடகவியலாளர்களை நசுக்குவதற்கு எமது கட்சி ஒருபோதும் இடம் அளிக்காது.
நடுநிலையான ஊடகவியலாளர்களின் செயற்பாட்டுக்கு என்றும் எமது கட்சி பக்கபலமாக இருக்கும். மக்களுக்காக பல ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் தற்போதும் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள், ஊடகத்தின் சுதந்திரத்தை கை வைப்பதற்கு ஒருத்தரையும் அனுமதிக்க முடியாது.
உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு
கடந்த கால அனர்த்தம் பொருளாதார நெருக்கடியின் போது நாம் உணர்ந்து கொண்ட ஒரு விடயம் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என்பதே ஆகும்.
எமது மாவட்டத்தில் சகல வளங்களையும் கொண்டுள்ள போது எமது மக்களை பசி பட்டினி இன்றி வாழ வைப்பதற்கு இந்த உள்ளூர் உற்பத்திகளின் தேவை முக்கியமானவையாகும்.
எனவே மக்களின் கட்சி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உரிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதே எமது முக்கிய பொறுப்பாகும்'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
