அடுத்த இரண்டு வாரத்திற்குள் முடியுங்கள்! ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு கோவிட் தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களுக்குள் அனுமதிக்காதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவிட் தடுப்பு விசேட குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் காலத்தில் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற கோவிட் தடுப்பு விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
பொது இடங்களுக்கு செல்லும் போது, தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையை கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கோவிட் நோயை கட்டுப்படுத்தும் விசேட குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொண்டு 03 மாதங்கள் நிறைவடைந்த அனைவரும் பூஸ்டர் டோஸினை பெறத் தகுதியுடையவர்கள் எனவும் ஜனாதியால் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, நாளை முதல், தடுப்பூசி போடப்படும் எந்த இடத்திலும் பூஸ்டர் டோஸ் மற்றும் ஃபைசர் தடுப்பூசியை பெற்றக் கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
இத்தினங்களில் பதிவாகிவரும் தொற்றாளர்களில் பெரும்பாலான கொவிட் தொற்றாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எனவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், கொவிட் பரவுவதைத் தடுக்க தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்க சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது.