வவுனியா மாநகர சபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு
வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 21ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று (19.11.2025) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் வழக்கு பிரதி மேயருக்கு எதிராக உள்ளமையால் சபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி கோரியதுடன், மேயர் மீதான இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறும் கோரினார்.
இதற்கு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இவற்றை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர் பிரதி முதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாநகர முதல்வர் சு.காண்டீபன், ஜனநாயகத் தேசிய கூட்டணியைச் சேர்ந்த பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறித்த மனுவில் வவுனியா மாநகர சபையின் முதல்வர் பிரதி முதல்வர் தெரிவின் போது, பிரதிவாதிகள் சட்டத்திற்கு முரணான வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவராக உள்ளார் எனவும் குறித்த இருவரும் அந்தப் பதவிகளில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பதவிகளை செல்லுபடியற்றதாக அறிவுக்குமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam