இலங்கையின் தேசிய மலர் குறித்து எழுந்துள்ள சர்ச்சை
இலங்கையின் தேசிய மலர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சுக்கு பொதுக்கணக்குக்குழு (கோபா) அறிவுறுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, இலங்கையின் தேசிய மலராக அல்லி பூ பெயரிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தேசிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் இது தொடர்பில் விளம்பரம் செய்ய தவறியுள்ளமையினால் இலங்கையின் தேசிய மலராக இன்றும் ´நீலோற்பலம்´ என பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுவதாக கோபா குழு அறிவித்துள்ளது.
எனவே தேசிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மலர் தொடர்பில் பாடசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அது உரிய வகையில் இடம்பெறவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கோபா குழுவின் முதலாவது அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.