அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்குகின்றது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கு மாறாக எதிர்க்கட்சியின் குரலை அடக்கும் செயற்பாட்டை அரசு முன்னெடுக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவ பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய நேற்று திங்கட்கிழமை அந்தப் பகுதிகளும் விஜயம் செய்தபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தடங்கல் ஏற்படுத்துவது இழிவான செயலாகும்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்படும்போது, ஒலிவாங்கியைத் துண்டிக்கும் நிலைக்கு அரசு வந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக நானும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சக உறுப்பினர்களும் தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்துவதை விடுத்து, மக்கள் பிரச்சினைகளை முன்வைப்பதற்காகவே எழுந்து நிற்கின்றோம். இவ்வாறு மக்கள் பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பங்களில் அதைத் தடுப்பது, கருத்துகளை வெளியிடுவதற்கு தடங்கல் ஏற்படுத்துவது இழிவான செயலாகும்.
ஒலிவாங்கிகளைத் துண்டிப்பதையோ அல்லது விவாதத்தை சீர்குலைப்பதையோ விடுத்து எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து நடைமுறை ரீதியான பதில்களைப் பெற்றுக்கொடுக்கும் பணியையே அரசு முன்னெடுக்க வேண்டும். தீர்வுகளை வழங்கும் யுகத்துக்கு மாறாக எதிர்க்கட்சியின் குரலை அடக்கும், பொய்யான கதைகளை முன்வைக்கும் யுகமே தற்சமயம் காணப்படுகின்றது.
இவ்வாறு பிரச்சினைகளை நாம் முன்வைப்பது அரசியல் நாடகமல்ல, மாறாக மக்களின் பிரச்சினைகளை அரசுக்கு முன்வைப்பதும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கத் தேவையான வழிகாட்டுதலை வழங்குவதுமாகும்.
அரசின் பல்வேறு நாடகங்களுக்குள் மக்கள் சிக்கிக் கொண்டாலும், எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி நாடகங்களை நடத்தாது மக்களினது பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்கி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
