பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதை திறப்பு விவகாரம் - அமைச்சருக்கு அவசர கோரிக்கை
மன்னார் பிரதேசத்திலிருந்து மறிச்சிகட்டி பூக்குளம் ஊடாக பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக பக்தர்களின் நலன் கருதி திறந்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்கவுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாதையை திறப்பதற்கான நடவடிக்கை
மேற்படி கடிதத்தில்,
மன்னார் மாவட்டத்தையும் வட மாகாணத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க தமிழ் பேசும் மக்கள் நீண்ட காலமாக பள்ளங்கண்டல் ஆலயத்தின் மத நிகழ்வுகள் மற்றும் திரு விழாக்களில் பங்கேற்று வருகிறார்கள்.
எனினும், தற்போது மன்னார் - பூக்குளம் வழியாக பள்ளங்கண்டல் ஆலயத்தை சென்றடையும் முக்கிய பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாத நிலையில் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுக்கிறார்கள்.

குறிப்பாக, கொண்டச்சி, முள்ளிக்குளம் உள்ளிட்ட ஆலயத்தை அண்மித்த பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது மதக் கடமைகள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு இந்தப் பாதை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
இந்த பாதை மூடப்பட்டுள்ளதால் வயோதிபர்கள், பெண்கள் மற்றும் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கூடுதல் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.
பள்ளங்கண்டல் ஆலயத்தின் முக்கியத்துவம்
இந்த விடயம் தொடர்பில் தமது பிரதேச மக்களின் பிரதிநிதி என்ற வகையில் பல்வேறு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை கருத்தில் கொண்டு பக்தர்களின் நலன் மற்றும் மத உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் பாதையை மீளத் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பல தசாப்தங்களாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கி வரும் பள்ளங்கண்டல் ஆலயத்தை நோக்கிச் செல்லும் இந்தப் பாதை மீண்டும் திறக்கப்படுவது, அப்பகுதி மக்களின் மத சுதந்திரத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அமையும்.
மேலும், பக்தர்களின் போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்துவதோடு, பிராந்திய மக்களின் மத மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு தடையில்லா அணுகலை வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.