மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டங்களுக்கு மட்டும் அனுமதி: டக்ளஸ் தேவானந்தா
மக்களின் வாழ்க்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தாத நன்மைகளை வழங்கக் கூடிய திட்டங்களுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பூநகரி பகுதியில் இலங்கை நிலைபெறு சக்தி அதிகார சபையினால் திட்டமிடப்பட்டு வருகின்ற ‘பூநகரி காற்று சூரிய சக்தி பூங்கா’ செயற்றிட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், காற்றாலைகளை அமைப்பதனால் மீன் உற்பத்தி பாதிக்கப்படுவதாக மக்கள் மத்தியில் அச்சம் வெளியிடப்படுவதால், மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள் உட்பட சம்மந்தப்பட்ட அனைத்து ஆய்வறிக்கைகளும் கிடைத்த பின்னர், இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்குச் சொந்தமான காணிகள் எவையும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு பகிர்ந்தளிக்கக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் காணிகளற்ற சுமார் 1800 இற்கும்
மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்ற நிலையில், வெளியாருக்குக் காணிகள் வழங்க
முடியாது எனவும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அதிகாரிகளுக்குத்
திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.