டொனால்ட் டிரம்புக்கு அதிகரிக்கும் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட ஈரான் எதிர்ப்பு போர் ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் கடும் பதற்றத்தில் தள்ளப்பட்டுள்ளது.
இந்த போரில் கிடைத்த இராணுவ வெற்றிகளை தெளிவான அரசியல் அல்லது புவியியல் அரசியல் வெற்றியாக மாற்ற முடியுமா என்ற கேள்வி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன் எழுந்துள்ளது.
போரின் ஆரம்பத்தில் ஈரானின் உச்ச தலைவர் அலி கொமெய்னி கொல்லப்பட்டதாகவும், நிலம், கடல் மற்றும் வான்வழி நடவடிக்கைகளில் ஈரான் இராணுவத்திற்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டாலும், இந்த மோதல் விரைவில் பிராந்திய அளவிலான போருக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அமெரிக்கா நீண்டகால இராணுவ ஈடுபாட்டில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகவும், அதன் விளைவுகள் டிரம்பின் கட்டுப்பாட்டை மீறக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானுடன் நடைபெறும் போர் மிகவும் சிக்கலானதும் நீண்டகாலம் நீடிக்கக்கூடிய இராணுவ நடவடிக்கையாகும் என வாஷிங்டனில் அமைந்துள்ள ஜோன் ஹோப்கின்ஸ் சர்வதேச கற்கை ஆய்வு மையத்தைச் சேர்ந்த லோரா ப்ளூமென்பெல்ட் தெரிவித்துள்ளார்.
இது உலக பொருளாதாரத்தையும் பிராந்திய நிலைத்தன்மையையும், மேலும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் நிலைப்பாட்டையும் பாதிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவை தேவையற்ற போர்களில் ஈடுபடுத்தமாட்டேன் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த டிரம்ப், தற்போது அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையிலும் திறந்த முடிவில்லாத போரை முன்னெடுத்து வருகிறார் என பல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
“எபிக் ஃப்யூரி” நடவடிக்கை
ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த இராணுவ நடவடிக்கை ஒபரேஷன் எபிக் பியுரி “Operation Epic Fury” என அழைக்கப்படுகிறது.
இது 2003ல் ஈராக் மீதான படையெடுப்பிற்கு பின்னர் அமெரிக்கா மேற்கொண்ட மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையின் இறுதி இலக்கு என்ன என்பது குறித்து தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் வெள்ளை மாளிகை பேச்சாளர் அனா கெல்லி, அமெரிக்காவின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன எனக் கூறியுள்ளார். ஈரானின் ஏவுகணை திறனை அழித்தல், அதன் கடற்படையை பலவீனப்படுத்தல், அதன் கூட்டணி ஆயுத ஆதரவை நிறுத்துதல் மற்றும் ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுத்தல் என்பவையே முக்கிய இலக்குகள் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும் தாக்கம்
போர் நீடித்து அமெரிக்க படைவீரர் உயிரிழப்புகள் அதிகரித்தால் அல்லது வளைகுடா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு பொருளாதாரச் செலவுகள் உயர்ந்தால், அது டிரம்பின் வெளிநாட்டு கொள்கையில் மிகப்பெரிய அரசியல் சூதாட்டமாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இதுவரை டிரம்பின் Make America Great Again (MAGA) இயக்க ஆதரவாளர்கள் பெரும்பாலும் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், அந்த ஆதரவு குறைந்தால் நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் நிலை பாதிக்கப்படலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
போர் மேலும் விரிவடையும் அபாயம்
ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்கள் காரணமாக பிராந்திய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பு மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்கியதால் போர் மேலும் ஒரு நாட்டிற்கு பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய முக்கிய கவலை ஒன்றாக ஹோர்மூஸ் ஜலசந்தி குறித்த அச்சம் உள்ளது. உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி இந்த நீரிணை வழியாகச் செல்கிறது.
இந்த நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் உலகளாவிய பொருளாதாரத்துக்கு கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
போரின் காலம் எவ்வளவு நீடிக்கும் என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், இந்த மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.