குடியேற்ற உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது
திருகோணமலை - மொரவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் குடியேற்ற உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியேற்ற உத்தியோகத்தர் திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதியிலுள்ள 10ம் கட்டை பகுதியில் அரசுக்குச் சொந்தமான காணியை பரிசீலனை செய்வதற்கு சென்ற போது குறித்த நபர் குடியேற்ற உத்தியோகத்தரை தாக்க முற்பட்டதாகவும், அவருடைய கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் குடியேற்ற உத்தியோகத்தர் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மொரவெவ பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவெவ-10ம் கட்டை கிதுல்உதுவ பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.பீ.பீ.விக்ரமசிங்ஹ (46வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன்,அவர் மதுபோதையில் இல்லை எனவும் வைத்தியசாலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் கைது செய்யப்பட்ட குறித்த நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.