வாகன இலக்கத் தகடுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகன இலக்கத் தகடுகள் உரிமையாளர்களால் எடுத்துக் கொள்ளப்படாமையால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட போதிலும் வாகன உரிமையாளர்களினால் இதுவரை பொறுப்பேற்கப்படாத சுமார் ஒரு இலட்சம் வாகன இலக்கத் தகடுகளே (Number Plates) தேங்கிக்கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேங்கிக் கிடக்கும் வாகன இலக்கத் தகடுகள்
இந்த இலக்கத் தகடுகளை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய மாவட்ட அலுவலகங்களிலும் இந்த இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய வாகன இலக்கத் தகடுகளுக்கு சம்பந்தப்பட்ட பிரதான அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.

ஏனைய மாவட்ட செயலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்களுக்குச் சென்று அவற்றுக்குரிய இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை திணைக்களத்தின் 011-2033333 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.