மட்டக்களப்பு, ஊறணி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் படுகாயம்
மட்டக்களப்பு - கொழும்பு வீதியின் ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும், மோட்டார்சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்தவரே உயிரிழந்துள்ளதுடன், பின் பகுதியில் அமர்ந்து பயணித்த பெண்ணே படுகாயமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பாறை கல்முனைக்குடி 9ம் பிரிவு வீட்டுத்திட்ட வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய இராசதம்பி முகமட் பசில் என தெரியவருவதுடன், படுகாயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்த போது ஊறணியிலிருந்து திருப்பெருந்துறையை நோக்கிப் பயணித்த பக்கோ இயந்திரமும், ஊறணி சந்தியை குறுக்கறுக்கும் போது மோட்டார்சைக்கிளும் பக்கோ இயந்திரமும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் பக்கோ இயந்திரத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





