ஓமிக்றோன் அச்சுறுத்தல்: சர்வதேச விமான சேவையை தொடங்குவதிலிருந்து பின்வாங்கிய இந்தியா
கோவிட்டின் புதிய திரிபான ஓமிக்றோன் வகை தொற்று இதுவரை 20 நாடுகளுக்குப் பரவியுள்ள நிலையில் இந்தியாவில் டிசம்பர் 15ஆம் திகதி தொடங்கப்படுவதாக இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமானச் சேவைகள் டிசம்பர் 15ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது ஓமிக்றோன் தொற்று காரணமாகச் சர்வதேச விமான சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 20 மாத இடைவெளிக்குப் பிறகு கோவிட்-19 காரணமாகத் தடைப்பட்டிருந்த விமானச் சேவைகளை டிசம்பர் 15 முதல் தொடங்க இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) அறிவித்தது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற இந்தியர்களுக்கான முக்கிய நாடுகளுக்கு விமானங்களை இயக்க அனுமதிக்க முடிவு செய்திருந்தது.
ஆனால் தற்போது வேகமாகப் பரவிவரும் ஓமிக்றோன் தொற்று இந்தியாவிற்குள் பரவாமல் இருக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் டிசம்பர் 15ம் தேதி தொடங்கப்படுவதாக இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.