தடுப்பூசிகளைப் பெறுவதில் நிதி சிக்கல் இல்லை! - அரசாங்கம் அறிவிப்பு
கோவிட் தடுப்பூசிகளை கொள்வனவுசெய்ய நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகளைப் பெறுவதில் நிதி சிக்கல் இல்லை என்று அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசிகளின் உற்பத்தியாளர்களுடன் பிரச்சனை காரணமாக அந்த தடுப்பூசிகளின் கொள்வனவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கோவிட் தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து தருவித்தபோதும் அந்த நாட்டின் நிலைமை இப்போது மாறிவிட்டது, இந்தியாவின் உள்ளூர் பாவனையை கருத்திற்கொண்டு அதன் இலங்கைக்கான ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சீரம் நிறுவனம் இலங்கைக்கு உறுதியளித்த தடுப்பூசி மருந்துகளை வழங்க முடியவில்லை என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.