ட்ரம்பின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஒபாமா
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட இனவெறி கலந்த காணொளி குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இழிவான காட்சி இடம்பெற்றிருந்தது.
ஆதாரமற்ற முறைபாடு
இந்த காணொளியில் 2020 தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரமற்ற முறைபாடுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், பிரையன் டைலர் கோஹன் (Brian Tyler Cohen) என்ற ஊடகவியலாளரின் நேர்காணலில் பேசிய ஒபாமா, ட்ரம்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பொது வாழ்வில் இருக்க வேண்டிய கண்ணியம், ஒழுக்கம் மற்றும் "வெட்கம்" ஆகியவை தற்போது காணாமல் போய்விட்டன. சமூக வலைதளங்களில் நடப்பவை ஒரு "கோமாளித்தனமான காட்சி" (Clown show) போல உள்ளது.
இந்த நிலையில், அரசியல் சூழல் இவ்வளவு மோசமாக இருந்தாலும், சாதாரண அமெரிக்க மக்கள் இன்னும் கருணை மற்றும் கண்ணியம் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.
மோசமான இனவெறிச் செயல்
இதேவேளை, ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கறுப்பின செனட்டர் டிம் ஸ்கொட், " வெள்ளை மாளிகையில் நான் பார்த்த மிக மோசமான இனவெறிச் செயல் இது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த காணொளியை தான் முழுமையாகப் பார்க்கவில்லை என்றும், இதற்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக, இது ஒரு "போலி ஆத்திரம்" என்று கூறிய வெள்ளை மாளிகை, பின்னர் ஊழியர் ஒருவரின் தவறால் இது பகிரப்பட்டதாகக் கூறி அந்த காணொளியை நீக்கியிருந்தது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை