பிறந்த குழந்தைக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
வவுனியா பொது வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் தொடர்பில் வெளிவந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் உள்ளடங்களாக நால்வர் கொண்ட விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த நான்காம்(04.08.2023) திகதி வவுனியா பொது வைத்தியசாலையில் தாயொருவர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
சர்ச்சைகள்
இதன்போது குறித்த விடுதிக்கு பொறுப்பான தாதியர் மற்றும் விடுதியில் பணியாற்றிய பெரும்பான்மையின தாதிய உத்தியோத்தர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தது.
தம்பதியினர் ஒருவருக்கு குழந்தை கிடைத்த நிலையில்
வைத்தியசாலையில் பெரும்பான்மையின தாதியர் ஒருவருக்கும் குழந்தையின்
தந்தைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
கருத்து வேறுபாடு கடந்த சனிக்கிழமை மாலை வாக்குவாதமாக மாறிய நிலையில் தந்தையார் குறித்த தாதியருடைய பெயரைக் கேட்டுள்ளார். அவரும் பெயரை கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் தந்தையாரை, தாதியர் அழைத்து என்னுடைய பெயர் உங்களுக்கு எதற்கு எனக் கேட்க உங்களை பற்றிய முறைப்பாடு மேற்கொள்ள வேண்டும் என குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.
அதற்கு கோபமடைந்த அந்த தாதியர் மருத்துவ சிட்டையை முடிவுறுத்தி, வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு கூற இது அரச மருத்துவமனை உங்களுக்கு அதனை கூற உரிமை இல்லை எனக் கூறிவிட்டு தந்தை வீடு சென்றுள்ளார்.
சுமார் 15 நிமிடங்களின் பின்னர் அவரது மனைவி அழைப்பு எடுத்து 7 ஆம் விடுதியில் உள்ள தலைமைத் தாதியர் நான் சொன்னால் தான் தாதியர்கள் உங்கள் பிள்ளைக்கு மருத்துவம் செய்வார்கள். உங்கள் கணவர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதனால் நாங்கள் செய்யமாட்டோம் என்றாராம்.
குழந்தை பகுதியில் கடமையில் இருந்த வைத்தியர், குழந்தையை பிரசவித்த பெண்ணை அழைத்து உங்கள் கணவரை எங்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் இல்லை எனில் நாங்கள் உங்கள் குழந்தைக்கு மருத்துவம் பார்க்கமாட்டோம் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தந்தை உடனடியாக மீண்டும் மருத்துவமனை சென்று 7 ஆம் விடுதிக்கு பொறுப்பான வைத்தியரிடம் முறையிட்ட போது, அவர் உடனடியாக வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு தெரியப்படுத்திய நிலையில் நடந்தைக் கேட்டுள்ளார். அவரிடம் எனது குழந்தைக்கு சேவை வழங்காத மருத்துவமனையில் எனது 10 நாட்களான பச்சிளம் குழந்தையை விட்டு செல்ல எனக்கு நம்பகதன்மை இல்லை என குழந்தையை வைத்தியசாலையில் இருந்து விடுவித்து தாருங்கள் என தந்தையார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட அவர் தாதியர்களிடமும், வைத்தியரிடமும் அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கூறிய நிலையில் விடுகைப் படிவத்தில் எனது மனைவியார் 12.08.2023 இரவு 10.28 மணிக்கு கையொப்பமிட்டதாக கூறப்படுகின்றது.
அதன் பின்னர் குழந்தையின் மருத்துவ படிவங்களை கோரிய போது இந்த நேரத்தில் இந்த வேலை தங்களுக்கு செய்ய முடியாது அதற்கான நேரம் வரும் போது மாத்திரமே நாங்கள் செய்வோம் என விடுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார முறைகேடுகள்
பத்து நாட்களாக பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் தங்களது அதிகாரத்தை கைவரிசையாக வைத்து எங்களை பழிவாங்கியதுடன் அவர்களின் சேவையையும் துஸ்பிரயோகம் செய்ததாக தந்தையாரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, குறித்த சம்பவம் ஊடகங்களில் வெளிவந்து சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் உட்பட நால்வர் கொண்ட விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சுகாதார அமைச்சில் கோவிட் இடைதங்கல் நிலையத்தில் இடம்பெற்ற மோசடி, கோவிட் தடுப்பூசி வழங்கலில் இடம்பெற்ற மோசடி, மந்திகை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிதி மோசடி , தீவகம் வேலணை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்த குடும்ப பெண் இவ்வாறு வடக்கு சுகாதாரத் துறையில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
