நாளை நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு பிரசாரம்! - அரச செவிலியர் அதிகாரிகள் சங்கம்
அரச செவிலியர் அதிகாரிகள் சங்கம் நாளை வியாழக்கிழமை (08) நாடு முழுவதும் எதிர்ப்பு பிரசாரத்தை நடத்த முடிவு செய்துள்ளது.
தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையில் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு, நேற்று காலை கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமையினை கண்டித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அரச செவிலியர் அதிகாரிகள் சங்க தலைவர் சமன் ரத்னபிரிய இதனை தெரிவித்துள்ளார்.
பதவி உயர்வு மற்றும் ஊழியர்களின் நிலை தொடர்பான இரண்டு அமைச்சரவை ஆவணங்களுக்கு இன்று ஒப்புதல் வழங்காமல் அது தொடர்பான தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ரத்னப்பிரிய தெரிவித்தார்.
இதன்படி தமது கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல், புறக்கணித்த அமைச்சரவை முடிவு குறித்து தமது அதிருப்தியைக் காண்பிப்பதற்காக நாடு முழுவதும் எதிர்ப்பு பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கான பொறுப்பை உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகளே ஏற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பொது சேவைகள் ஐக்கிய செவிலியர் சங்கம் ஜூலை 02 ம் திகதி முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்துக்கு தீர்வுகளை உடனடியாக வழங்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார்.
எனினும் ஏனைய இரண்டு கோரிக்கைகள் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என தெரிவித்திருந்த அரச செவிலியர் சங்கம் குறித்த இரண்டு கோரிக்கைகளையும் நேற்று கூடிய அமைச்சரவை அங்கீகரிக்க வேண்டும், இல்லையேல் தமது போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.