வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு (Video)
வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வைத்திய சேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (24) காலை 7 மணி முதல் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கின்றது.
எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் தாதியர்கள், மற்றும் ஏனைய சுகாதார பிரிவினர் கடமைக்கு சமூகமளிக்காமையினால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக இன்று அதிகாலை தொடக்கம் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் மழை பெய்துவரும் நிலையில் மழையினையும் பொருட்படுத்தாது வைத்தியசாலைக்கு பல்வேறு மருத்துவ தேவைக்காக வந்த நோயாளிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இதேவேளை, 7 கோரிக்கைகளை முன்வைத்துப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதாரதுறையினர் சிலரின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் மருந்து
விநியோகப் பகுதியும் மூடப்பட்டுள்ளன.
மருத்துவ ஆய்வுகூட உத்தியோகத்தர்கள், மருந்து விநியோகிப்பவர்கள்,
மருந்தாளர்கள், எக்.ஸ்ரே படப்பிடிப்பாளர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதார
பரிசோதகர்கள் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.





