அனைத்து வளங்களும் எமது மண்ணில் இருந்தும் நாம் இன்னும் முன்னேறவில்லை - அரசாங்க அதிபர் ஆதங்கம்!!
அனைத்து வளங்களும் எமது மண்ணிலிருந்தும் நாம் இன்னும் முன்னேறவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரம் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இதன் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சகல வளமும் உள்ள ஒரு பிரதேசமாக செங்கலடி பிரதேசம் இருந்தபோதிலும் இதுவரைக்கும் நாம் முன்னேறவில்லை என்பது ஒரு கவலைக்குரிய விடயம் வெளிநாடுகளை எடுத்துப் பார்த்தோமானால் பாவித்த தண்ணீரையே வடிகட்டி மரங்களுக்கு விட்டு முன்னேற்றம் அடைந்து கொண்டு வருகின்றார்கள்.
எங்களது மாவட்டத்தில் ஒரு அளவு முன்னேற்றம் இருந்தாலும் எதிர்பார்த்த அளவு வேகத்துடன் செல்லவில்லை. பல்துறைகளிலும் பலர் இருக்கின்றனர், இளைஞர்கள் இருக்கின்றார்கள், பல்கலைக்கழகம் சென்றிருக்கின்றார்கள், ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள் எந்த துறையிலிருந்தாலும் எங்களது வேகம் இதுவரைக்கும் போதாமல் தான் காணப்படுகின்றது.
ஆகவே மற்ற இனங்களுடன் போட்டிப் போட்டுப் பார்ப்போமானால் நாங்கள் பின்னடைவாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றோம். எந்த ஒரு அரசாங்க திட்டமானாலும் அது எமது வாழ்வாதாரம் என்ற ரீதியில் எடுத்து அவற்றை நாம் பராமரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.