உக்ரேனிய சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை! கிமார்லி பெர்ணான்டோ
உக்ரைனிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் ஒரு குழுவினர் மிரிச பகுதிக்கு திமிங்கலத்தைப் பார்ப்பதற்கும், யால பகுதிக்கு உல்லாசப் பயணம் சென்றதையும் ஊடகங்கள் மூலமே அறிந்து கொண்டதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அதிகாரசபையின் தலைவர் கிமார்லி பெர்ணான்டோ, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உக்ரைய்ன் சுற்றுலாப் பயணிகளின் விரிவான பயணத்திட்டங்களை முன்கூட்டியே, சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபைக்கு பெற்றுத்தருவதற்கு ஏற்கனவே உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.
உக்ரைய்ன் நாட்டவர்களுடன் உல்லாசப் பயணங்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மற்றும் வழிகாட்டிகளின் விவரங்களை குறித்த பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக இது அவசியமாக இருந்தது.
எனினும் அது தொடர்பான தகவல்கள் எவையும் தமது அதிகாரசபைக்கு கிடைக்கவில்லை.
இந்தநிலையில் தனியார் படகுகள் சுற்றுலாப் பயணிகளை திமிங்கலத்தைப் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றதாகவும், யால பிரதேசத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் ஊடகங்கள் ஊடாகவே கேள்விப்பட்டதாக சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.