யாழில் கடுமையான மணல் நெருக்கடி : அரசாங்க கட்டுமானப் பணிகள் இடைநிறுத்துவதாக எச்சரிக்கை
வட மாகாணம் முழுவதும் தொடர்ச்சியாக நிலவி வரும் மணல் பற்றாக்குறை மற்றும் கட்டுப்பாடற்ற மணல் விலை உயர்வு தொடர்பில் இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் வட மாகாண கிளை கவலை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வட மாகாண ஆளுநர், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) தலைவர் மற்றும் அதிகாரிகள், மேலும் தொடர்புடைய அரச அதிகாரிகளுடன் பல கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், மீண்டும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் கலந்துரையாடல்கள் நடைபெற்றும் கூட இதுவரை எந்த பயனுள்ள தீர்வும் வழங்கப்படவில்லை.
மணல் பற்றாக்குறை
தற்போது நிலவி வரும் மணல் பற்றாக்குறை முழு கட்டுமானத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது.
அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள், பொது உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் தனியார் துறை கட்டுமான நடவடிக்கைகள் பெரும் தாமதங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருகின்றன.

அதேவேளை, சட்டவிரோத மணல் விற்பனை மற்றும் மணல் மாபியா நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அநியாயமான விலை உயர்வுகளும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான சிரமங்களும் ஏற்பட்டுள்ளன.
சங்கத்தின் வலியுறுத்தல்
அதிகாரிகள் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சங்கம் வலியுறுத்துவதாவது,
வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியாயமான கட்டுப்பாட்டு மணல் விலையை நிர்ணயித்தல் வேண்டும்.

மணலின் தொடர்ச்சியான மற்றும் வெளிப்படையான விநியோகம் மற்றும் பகிர்மானத்தை உறுதிசெய்தல்.
சட்டவிரோத மணல் விற்பனை மற்றும் ஏகபோக நடவடிக்கைகளைத் தடுத்தல். இந்த விடயங்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்குமாறு சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
மேலும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நடைமுறைசார்ந்த தீர்வு எதுவும் வழங்கப்படாவிட்டால், வட மாகாண ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் இணைந்து அரசாங்க கட்டுமானப் பணிகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ளது.