வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள் வழங்கும் நிகழ்வு குறித்து வெளியான அறிவிப்பு
வடமாகாணத்தின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்தின் சிறந்த தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வு தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 29-12-2025 அன்று நடைபெறவுள்ளது.
வட மாகாணத்தின் தொழில்முனைவோருடைய திறன்கள், அவர்களின் புத்தாக்கங்கள், தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள் போன்றவற்றை பாராட்டுவதோடு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, சிறந்த தொழில்முனைவோரை தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதே இவ் விருதுகளின் பிரதான நோக்கமாகும்.
விருதுகள்
குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 இல் பெண் தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோர், வேளாண்மை, உணவு சார் உற்பத்திகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி, கல்வி, ஏற்றுமதிகள், கட்டிட நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு, கைவினை மற்றும் படைப்புத் துறை உள்ளிட்ட 16 பிரிவுகளில் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 ற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து எம்மிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |