வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகள் குறித்து வடக்கு ஆளுநர் வலியுறுத்தியுள்ள விடயம்
வாழ்வாதார மேம்பாட்டுக்காகத்தான் உதவிகள் - நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. அதைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தொடர்ந்தும் அவை கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டத்தின் வவுனியா மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்துக்கான மீளாய்வுக் கூட்டம் நேற்று (13.02.2025) இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னெடுக்கப்படும் திட்டம்
வறுமை ஒழிப்புக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. உதவிகளைப் பெற்றுக்கொள்வோர் அதனைத் தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்குத்தான் விரும்புகின்றனரே தவிர, பெற்றுக்கொண்ட உதவிகளைப் பயன்படுத்தி தங்களை வலுவூட்டவில்லை.
இவ்வாறான திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறையவில்லை என்று குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கான மதிய உணவு வழங்கல் திட்டத்துக்கு, மரக்கறிகளை வழங்குவதற்காக விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விவசாய உபகரணங்கள் விதைகள் என்பன வழங்கப்பட்டிருந்தன. அதேபோன்று முட்டைகள் வழங்குவதற்காக பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு கோழிகள் வழங்கப்பட்டிருந்தன.
இவ்வாறு முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் என்பனவற்றின் முன்னேற்றம் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டது.
மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்
சந்தையில் விவசாயப் பொருட்களின் விலை அதிகரிக்கும் காலங்களில் பாடசாலைகளுக்கு குறைந்த விலையில் மரக்கறிகளை இந்தத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் வழங்கப் பின்னடிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
பயனாளிகள் தெரிவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக்கூடாது என்றும் குறிப்பிட்ட ஆளுநர், தொடர்புடைய திணைக்களங்கள் நேரடியாக கள ஆய்வுகளை கூட்டாக மேற்கொண்டு பயனாளிகளை எதிர்காலத்தில் தெரிவு செய்யுமாறும் ஆலோசனை வழங்கினார்.
மாணவர்களுக்கு உணவு வழங்கும் இந்தத் திட்டத்தால் கிடைக்கப்பெற்ற அடைவுமட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலர், கல்வி அமைச்சின் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் பணிப்பாளர் மற்றும் மாவட்ட பிரதிப் பணிப்பாளர்கள், வடக்கு மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


