அலுவலக அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநரின் கடும் உத்தரவு: மக்கள் சேவையை வலுப்படுத்தும் நடவடிக்கை
சாதாரண நிர்வாகத்தைப் போன்று அல்லாது, அபிவிருத்தி நிர்வாகத்தை முன்னெடுப்பதற்குத் துரித முடிவெடுக்கும் ஆற்றலும், வேலையின் மீதான அர்ப்பணிப்பும் மிக அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல், நேற்று(14.02.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பணிப்புரை வழங்கிய போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தகாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் பின்னூட்டங்கள் பெறப்பட்டு, அவை நிதி ஆணைக்குழு மற்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, இந்த ஆண்டுக்கான திட்டங்களைக் கையாள வேண்டும். 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் மதிப்பீட்டுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழான திணைக்களங்கள் ஏற்கனவே கேள்வி கோரல்களைப் பிரசுரித்துள்ளமை பாராட்டத்தக்கது.
ஏனைய அமைச்சுக்களும் இச்செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில், ஒப்பந்தகாரர்களின் வேலைத்தரம் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எனவே, இனிவரும் காலங்களில் தரம் குறைந்த வேலைகளைச் செய்யும் ஒப்பந்தகாரர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அல்லது நிராகரிப்பதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும்.

அலுவலகங்களுக்குள் மட்டும் முடங்கி இருக்காது, ஒவ்வொரு அமைச்சும் ஒவ்வொரு மாதமும் மாகாணத்தின் ஏதாவது ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து, அங்கு நேரடியாகச் சென்று மக்களின் தேவைகளை அடையாளப்படுத்தி, அவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கெனத் தனியானதொரு பொறிமுறையை அமைச்சுக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் நேரடி முறைப்பாடுகள்
திணைக்களங்களைக் கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு அமைச்சின் செயலாளர்கள் ஊடாகவும் அமைக்கப்பட்ட 'பறக்கும் படை' மேலும் வினைத்திறனாகச் செயற்பட வேண்டும்.
அரச அலுவலர்களின் நேர முகாமைத்துவம் மற்றும் சேவை வழங்கல் குறித்துப் பொதுமக்களிடமிருந்து எனக்குப் பல நேரடி முறைப்பாடுகள் வருகின்றன.

பறக்கும் படை துடிப்பாகச் செயற்பட்டால் இத்தகைய குறைபாடுகளைத் தவிர்க்க முடியும். சில உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இடையில் சுமூகமான உறவு இல்லாத நிலை காணப்படுகின்றது. இரு தரப்பிலிருந்தும் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் வருகின்றன.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தித் தீர்வு காணப்படும். இந்த வருடம் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால், மேலதிக வேலைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான ஆயத்தங்களை இப்போதே மேற்கொள்ள வேண்டும்.
அதேவேளை, வழமையான வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்து, அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு அமைச்சினதும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் தனித்தனியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam