மதுபோதையில் விடுதியொன்றில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி அதிகாரிகள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கொழும்பு - இரத்மலானையில் உள்ள வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு சொந்தமான தங்குமிட விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி அதிகாரிகள் சிலரை விசாரணை முடியும் வரை தற்காலிகமாக சுற்றுலா விடுதியில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பான சந்திப்பிற்காக வடக்கு மாகாணத்தில் இருந்து சென்றிருந்த மூத்த கல்வி அதிகாரிகள் சிலர் மது போதையில் குழப்பம் விளைவித்ததாக அயல் விடுதி அறையில் இருந்தவர்களால் வட மாகாண பொது சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டமூலம்
குறித்த விடயத்தை உறுதி செய்வதற்காக வட மாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவுக்கு தகவலறியும் உரிமை சட்டம் மூலம் நடந்த விடயங்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் தொடர்பில் கேட்கப்பட்டுள்ளது.
எனினும் பொதுச் சேவை ஆணைக்குழுவினால், குறித்த விடயம் தொடர்பில் மாகாணப் பிரதி பிரதம செயலாளர் நிர்வாகத்திடம் விண்ணப்பிக்குமாறு கோரிக்கையாளருக்கு பதில் அனுப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாகாண பிரதி பிரதம செயலாளருக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக முறைப்பாட்டாளரினால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
முரணாக நடந்து கொண்ட உத்தியோகத்தர்கள்
இதற்கமைய முறைப்பாடு விண்ணப்பத்துக்கு பதில் வழங்கிய வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் நிர்வாகம் அவர்களின் பதிலில், குறித்த விடுதியில் முரணாக நடந்து கொண்ட உத்தியோகத்தர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறியத் தரும் வகையில் தற்காலிகமாக அவர்கள் சுற்றுலா விடுதியில் தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் அனுப்பப்பட்ட நிலையில் அதிகாரிகள் தொடர்பில் பெயர் விபரங்கள் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
