இந்தியாவின் கைகோர்ப்பை எதிர்பார்த்துள்ள வடக்கு மாகாணம்.!
எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிகவேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. வடக்கு மாகாணம் உதவிகளை இந்தியாவை நம்பியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களிடமிருந்து மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்று (28.05.2025) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர், "முல்லைத்தீவு மாவட்டச் செயலராக நான் பணியாற்றியிருக்கின்றேன். இங்குள்ள கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு மிக நன்றாகவே தெரியும்.
இந்தியாவின் உதவிகள்
போரால் பாதிக்கப்பட்ட நீங்கள் மீள்குடியமர்வின் பின்னர் சட்டவிரோத கடற்றொழிலால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள். உங்கள் பெறுமதியான வலைகளையும் இழந்திருந்தீர்கள். இன்று இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் உங்களுக்கு பெறுமதியான வலைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குகின்றனர்.
இந்திய மக்களும், இந்திய அரசாங்கங்களும் எங்களுக்கு காலத்துக்கு காலம் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தன. முக்கியமாக இந்திய வீட்டுத் திட்டத்தை குறிப்பிட வேண்டும். அவர்களால் எமது தொடருந்து பாதைகள் புனரமைக்கப்பட்டன.
இன்றைய தினம் முல்லைத்தீவு மருத்துவமனையின் புனரமைப்பை இந்தியா பொறுப்பேற்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அறிவித்திருக்கின்றார். அதற்கு அவருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன். எதிர்காலத்திலும் எமது மக்களுக்கான உதவிகளை இந்தியா தொடரவேண்டும்” என்றார்.
இதன் பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் விசேட உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கான குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் வலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தூதுவர் சந்தோஷ் ஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








