சமாச முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை: புதிய வடமராட்சி வடக்கு சமாச தலைவர் எடுத்துள்ள தீர்மானம்
சமாசத்திற்குச் சொந்தமான தற்போதைய கட்டடம் முறையான பராமரிப்பின்றி, மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் பாழடைந்து காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக புதிய வடமராட்சி வடக்கு சமாச தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடகையில், "தற்போதைய நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் இக்கட்டிடம் விலங்கினங்கள் மற்றும் ஏனைய ஜீவராசிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில், குறிப்பாக சுனாமி அனர்த்தத்திற்குப் பிற்பட்ட காலப்பகுதியில், இந்தச் சமாசத்திற்குப் பல்வேறு வாழ்வாதார உதவிகள், வலைகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டன.
பெரும் வருமானம்..
அத்துடன், பெருமளவிலான நிதியும் கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் சங்கங்கள் தன்னிச்சையாகவும் வலுவாகவும் இயங்கும் அளவுக்குச் சமாசம் பெரும் வருமானத்தை ஈட்டித் தந்தது.

இருப்பினும், கடந்த காலப் பெருமையுடன் இன்றைய சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அங்கு பெருமளவில் நிதி மற்றும் பொருள் முறைகேடுகள் (ஊழல்) இடம்பெற்றிருப்பது தெளிவாகப் புலனாகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும்: கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலப்பகுதியில் சமாசத்திடம் இருந்த சொத்துக்கள், உபகரணங்கள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து தற்போது விரிவான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன" என்றார்.