வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற கிளித்தட்டு போட்டி
வணங்காமண் மறுவாழ்வு கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிளித்தட்டுப்போட்டியானது நேற்றையதினம் (29) சிறப்புற இடம்பெற்றிருந்தது.
வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியானது 06.06.2025 அன்று அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் கதிரவன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நேற்றையதினம் இறுதி போட்டியானது கரடிபிலவு, பழம்பாசி, ஒட்டிசுட்டான் பகுதி கதிரவன் விளையாட்டு மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
அழிவு நிலையில் உள்ள தமிழர்களது பாராம்பரிய விளையாட்டாக கிளித்தட்டு இருப்பதனால் அதனை கிராம மட்டங்களில் இருந்து மீளுருவாக்கும் நோக்கோடு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அணிகளை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்தது.
கிளித்தட்டு போட்டி
ஆரம்ப போட்டியில் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 10 அணிகள் பங்குபற்றி அதில் இருந்து மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களில் குறித்த கிளித்தட்டு போட்டியானது ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் இடம்பெற்று ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு போட்டிகள் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்படும் அணிகள் இறுதி போட்டியில் பங்குபற்றியிருந்தது.
இறுதிப்போட்டியில் யாழ் மாவட்ட ஏ அணியும் , கிளிநொச்சி மாவட்ட ஆதவன் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டிருந்தனர். விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் 4: 3 என்ற ரீதியில் 4 பழங்களை எடுத்து யாழ் அணியினர் வெற்றியை தமதாக்கி கொண்டனர்.
அத்தோடு யாழ் மாவட்ட பி அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர். குறித்த போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற அணிக்கு ஒரு லட்சம் ரூபா பணப் பரிசும், இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 50,000 ரூபா பணப் பரிசும் , மூன்றாம் இடத்தை பெற்ற அணிக்கு 30,000 ரூபா பணப் பரிசும் , வெற்றி பெற்ற அணிகளுக்கான பிரமாண்ட வெற்றிக்கேடயமும், அனைத்து வீரர்களுக்குமான வெற்றி பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
வெற்றி பதக்கங்கள
மாலை நிகழ்வாக தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகளாக சிவலீமன் தற்காப்பு கலை மன்ற மாணவர்கள் வீரதீர தற்காப்பு கலைகளாகிய சிலம்பம், சுருள்வாள், தீப்பந்தம், வாள், கேடயம் போன்ற கலைகளை பாபு மாஸ்டரின் தலைமையில் நடாத்தப்பட்டிருந்தது.
இதன் போது பாடசாலை மாணவர்களுக்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன் கற்றல் உபகரணங்களும், துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிஷாந்தன், கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு வைத்தியசாலை வைத்தியர்களான கெ.சுதர்சன், தனஞ்சயன் சிறப்பு விருந்தினர்களாக நெடுங்கேணி மகாவித்தியாலய அதிபர் சி.நாகேந்திரன், கொக்குளாய் அ.த.க பாடசாலை அதிபர் ஆர்.பாஸ்கரன் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
