நாடாளுமன்றத்திலும் ஆதரவில்லை: வருத்தம் தெரிவித்த மட்டக்களப்பு பண்ணையாளர்கள் (Photos)
நாடாளுமன்றத்திற்குள் நடத்தும் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்க முன்வராமை கவலைக்குரிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களினால் இன்று சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து வேண்டுதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கவனயீர்ப்பு பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளும் 400க்கும் மேற்பட்ட சிங்களர்களும் வருகைதந்து ஆக்கிரமிப்பு பணிகள் தீவிரமடைந்துவருவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது மேய்ச்சல் தரை காணி அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரியும் காணியை அபகரிப்பாளர்களை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கடந்த 22நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.
பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த கால்நடை பண்ணையாளர்கள் தமது போராட்ட இடத்திற்கு முன்பாக மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமது பிரச்சினை குறித்து சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு ஆதரவு வழங்கி ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த நிலையில் எங்களது வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றம் சென்று அமைச்சர்களாகயிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த போராட்டத்திற்கு எதிராக பேசியதும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்காத செயற்பாடும் மிகவும் கவலைக்குரியது எனவும் கால்நடை பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் எனவும் ஜனாதிபதி எமக்கான தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி எமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவார் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



