ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை என்று யாரும் கூற முடியாது: சந்திரிக்கா
தீவிர முறைமை மாற்றத்தை, இலங்கையர்கள் கோருகின்றனர், எனவே அதனை வழங்கக்கூடிய ஒருவரை வாக்காளர்கள் தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (23.11.2022) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 5.6 மில்லியன் வாக்குகள் உள்ளன.
காலிமுகத்திடல் போராட்டம்
ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை என்று யாரும் கூற முடியாது. எனவே ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைவது குறித்து எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் விவாதிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். இலங்கையின் இளைஞர்கள் தலைமையிலான அரகலய (போராட்டம்) போராட்டங்களில் இருந்து உருவான சக்திகளை அழிக்க முடியாது.
அவர்கள் ஒரு தீவிர அமைப்பு மாற்றத்தை கோருகிறார்கள். எனவே அதை வழங்கக்கூடிய ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாணய நெருக்கடி
குறித்த ஊடக சந்திப்பில், எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் யாரை அல்லது எந்தக் கட்சிக்கு சந்திரிக்கா ஆதரவளிக்கப் போகிறார் என்பதை வெளிப்படையாகக் கூறவில்லை.
இது இவ்வாறிருக்க, நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் தற்போதைய நாணய நெருக்கடி தீர்க்கப்படும் வரை தேர்தல் நடத்தப்படாது என கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு மக்கள் எழுச்சியையும் ஒடுக்கப்போவதாக ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.