ஜனாதிபதியின் திட்டங்களில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் இல்லை..! சி. பரமேஸ்வரநாதன் குற்றச்சாட்டு
அநுர அரசாங்கம் நல்ல பல திட்டங்களை செய்திருந்தாலும், நாட்டினுடைய முதுகெலும்பாகச் சொல்லப்படுகின்ற விவசாயத் துறையில் பாரிய மாற்றம் ஏதும் செய்யவில்லை என பட்டிப்பளை பிரதேச தமிழ் விவசாய சங்க இணைப்பாளர் சி. பரமேஸ்வரநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று(16.05.2026) மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினால், மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருக்கும் போது, விவசாயிகளுக்காகவும் தொழிற்சங்கங்களுக்காகவும் ஒரு இடதுசாரி கட்சியாக இருந்து குரல் கொடுத்து அளப்பெரிய சேவையை புரிந்ததோடு, இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய விவசாயிகளினுடைய எதிர்கால வாழ்க்கைக்காகவும் அரும்பாடுபட்டு உழைத்தார்கள்.
இதன் காரணமாகவே இன்றைய இளைஞர்கள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த இன்றைய ஆட்சியாளர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக பாடுபட்டார்கள்.

ஆனால், ஜனாதிபதி சிறப்பான திட்டமிடலோடு நல்லதொரு அமைச்சரவையையும் நிறுவி, நாட்டினை நிர்வகித்துக் கொண்டு சென்றாலும், உண்மையிலேயே இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய விவசாயத் துறையிலே எந்தவித ஒரு மாற்றமும் இடம்பெற்றதாக விவசாயிகளாகிய எங்களால் உணர முடியவில்லை.
குறிப்பாக இந்த நாட்டிலே 2025ஆம் ஆண்டு நெல் உற்பத்தியில் 5.5 மில்லியன் மெட்ரிக் தொன் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.6 வீதம் அதிகரித்திருக்கின்றது.
ஆனால், விளைச்சல் அதிகரித்தாலும், இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது 152.6 வீதம் கூடுதலான அரிசி இறக்குமதியினை தற்போதைய ஆட்சியாளர்கள் செய்திருக்கின்றார்கள்.

இதனால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலே நெல் வாங்குவதற்காக பீகொக் என கேலியாக சொல்லுகின்றார்கள். ஆகவே அடிமட்டத்தில் இருக்கின்ற மக்கள், பீகொக் என்றால் என்ன என்று யோசிக்கிறார்கள். நெல் இருக்கிறதா? என்று கேட்பதை விட 'கோழித்தீவனம்' இருக்கிறதா? என்று கேட்கின்ற நிலைமையாக மாறி இருக்கின்றது.
காரணம் என்னவென்றால், எங்களுடைய மாவட்டத்திலே உற்பத்தி செய்திருக்கின்ற நெல்லை சரியான முறையிலே சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகளாகிய நாங்கள் திக்குமுக்காடுகின்றோம்.
அந்நியச் செலாவணி
தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த கால ஆட்சியாளர்களை ஏதோ ஒரு வகையில் திட்டித் தீர்த்தாலும், அவர்கள் மீது பழிசுமத்தினாலும், அதே வேலையினை தற்போதைய ஆட்சியாளர்களும் செய்கின்றார்கள் என்பது உண்மையிலேயே மனவேதனையை ஏற்படுத்துகின்றது.
ஆனால், எங்களுடைய நெல்லை எங்களுடைய மாவட்டத்திலே வந்து இடைத்தரகர்களின் ஊடாக 5,800 ரூபாய், 6,000 ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்கின்றார்கள். ஏன் என்று கேட்டால், "அதனை கோழித்தீவனத்துக்காக நாங்கள் கொள்வனவு செய்கின்றோம்" என்று கேலி செய்கின்றனர்.

ஆனால் உற்பத்திச் செலவிலே எந்தவித மாற்றமும் இல்லை. உற்பத்திச் செலவு அதிகமாகவே காணப்படுகின்றது. 2025ஆம் ஆண்டு 101 மில்லியன் யு.எஸ் டாலருக்கு இந்த நாட்டிலே அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, அந்த அளவிற்கு அந்நியச் செலாவணி எங்களுடைய நாட்டில் வீணடிக்கப்பட்டிருக்கின்றது.
2024ஆம் ஆண்டு 14.8 மில்லியன் யு.எஸ் டாலருக்கு இறக்கிய அரிசியை, தற்போது இந்த ஆண்டு 101 மில்லியன் யு.எஸ் டாலருக்கு இறக்கியிருக்கிறார்கள்.

இதிலிருந்து இந்த நாட்டினுடைய அந்நியச் செலாவணி எங்கே போயிருக்கின்றது என்று பாருங்கள். மாதாந்தம் 16,000 தனிநபர் வருமானம் பெறுகின்ற அஸ்வெசும பயனாளிகள் கூட, 21 கேள்விகளைக் கொண்ட வினாக்கொத்திலே 11 கேள்விகளில் சித்தியடைந்திருந்தால் மாத்திரம் அஸ்வெசும பயனாளியாக இந்நாட்டு அரசாங்கத்தினுடைய சுற்றுநிரூபத்திற்கு அமைய தெரிவு செய்கின்றார்கள்.
ஆனால் அவர்களுக்கு அரை ஏக்கரோ அல்லது கால் ஏக்கர் நிலம் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்கள் அந்த பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார்கள்.
ஜனாதிபதியின் வருகை
ஏன் இந்நாட்டினுடைய உற்பத்திப் பொருளை ஒரு முடிவுப் பொருளாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் நினைப்பதில்லை? கடந்த ஆட்சியாளர்களைப் போன்று தாங்களும் ஏதோ ஒரு வகையில் இந்த நாட்டினுடைய உற்பத்திப் பொருட்களையும் வரிகளின் ஊடாகச் சேகரிக்கின்ற பணங்களையும் வீணடிக்கின்றீர்களோ என்ற சந்தேகம் தற்போது எங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
எனவே, தயவுசெய்து எதிர்வருகின்ற 20ஆம் திகதி அன்று மட்டக்களப்பிற்கு வருகை தரவிருக்கின்ற ஜனாதிபதியிடம் நாங்கள் ஒரு விடயத்தினைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

இந்த இலங்கையிலே கடந்த ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம், விவசாயிகளுடைய விடயத்திலே அக்கறை செலுத்தாமல் விவசாயத் துறையிலே கைவைத்தமையினாலேயே ஆகும். அதனை நாங்கள் விரும்பவில்லை. காரணம், நல்ல பல திட்டங்களை தாங்கள் செய்திருந்தாலும், இந்த நாட்டினுடைய முழு முதுகெலும்பாகச் சொல்லப்படுகின்ற விவசாயத் துறையில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை.
தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த விவசாயிகளினுடைய நலனை, கொஞ்சமாவது கருத்திற் கொள்ள வேண்டும். அண்மையில் எரிபொருள் 100 ரூபாயினால் அதிகரித்திருக்கின்றது. வாகனங்களினுடைய உதிரிப் பாகங்கள், உரம் மற்றும் ஏனைய பல விடயங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது விதைநெல்லை தெரிவு செய்ய வேண்டுமானால் 10,000 அல்லது 12,000 ரூபாய் தேவைப்படுகின்றது.

அத்துடன் ஒரு மூடை நெல்லை விற்பனை செய்கின்ற பொழுது நாங்கள் 5000 அல்லது 6000 ரூபாய்க்கு விற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
எனவே, இந்த நாடு எதிர்காலத்திலே தன்னிறைவான நாடாக அமைய வேண்டுமானால், சொல்லிலே இருக்கின்ற விடயத்தினைச் செயலிலே காட்ட வேண்டும் என்பதனை நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும், நீங்கள் எங்கள் பிரதேசத்திற்கு வருகைத்தருகின்ற பொழுது எங்களுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுத் தருவீர்கள் என நம்புகின்றோம் என்றார்.
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan