ரிசாத் பதியுதீனை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிப்பதில் சட்டரீதியான தடைகள் இல்லை என அறிவிப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை அனுமதிப்பதில் சட்டரீதியான தடைகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் இதனை அறிவித்துள்ளதாக அவரின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களம் விடுத்திருந்த கோரிக்கைக்கு இந்த பதில் வழங்கப்பட்டிருக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு ரிசாத் பதியுதீன் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்பிலான விசாரணை முடியும் வரை அவரை நாடாளுமன்ற அமர்வுக்காக அனுமதிக்க வேண்டாம் என்று அமைச்சர் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக இன்று கருத்துரைத்த அமைச்சர் சரத் வீரசேகர, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் விசாரணை முடியும் வரை நாடாளுமன்றத்துக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுள்ளார்.
நடப்பு விசாரணைகள் தொடர்பில் ரிசாத் பதியுதீன் தமது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி கருத்துக்களை வெளியிட்டால் அது, நடைமுறை விசாரணைகளுக்கு குந்தகமாக அமைந்துவிடலாம்.
அத்துடன் எதிர்காலத்தில் கைது செய்யப்படவிருப்பவர்கள் சட்டத்தில் இருந்து
தப்பித்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடியதாக இருக்கும் என்றும் சரத் வீரசேகர
குறிப்பிட்டுள்ளார்.